காசாவில் நீர் விநியோக சாரதிகள் மீது தாக்குதல் – UNICEF கடும் கண்டனம்
காசாவில் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு சாரதிகள் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் உள்ள மன்சூரா நீர் நிரப்பும் இடத்தில், வழக்கமான தண்ணீர் விநியோகப் பணியின் போது இந்தச் சம்பவம் நடந்ததாக UNICEF கூறுகிறது.
இதன்போது மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அந்த இடத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், முழுமையான விசாரணை நடத்தி பொறுப்புக்கூறல் உறுதி செய்ய வேண்டும் என்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை UNICEF வலியுறுத்தியுள்ளது.
மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் முக்கிய நீர் உட்கட்டமைப்புகள் எப்போதும் இலக்குவைக்கப்படக்கூடாது என்றும், பொதுமக்களையும் உதவிப் பணியாளர்களையும் பாதுகாப்பது சர்வதேச சட்டத்தின் கீழ் கட்டாயம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும், கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




