ரணில், சஜித் சங்கமம் சாத்தியமா?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தின்கீழ் தனிக்கட்சியாக ஒன்றிணைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாரில்லை என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.
அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமாகும். இந்த நடவடிக்கையானது தனியொரு கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கல் அல்ல எனவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இடம்பெற்றுவருகின்றது.
இவ்வாறு இரு தரப்புகளும் இணைந்து மாகாணசபைத் தேர்தலை பொதுபட்டியலின்கீழ் எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடும் இடம்பெற்றுவருகின்றது என தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே ஐ.தே.க உறுப்பினரான அஜித் மானப்பெரும மேற்கண்டவாறு கூறினார்.
அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே ஹரின் பெர்ணான்டோவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.