நடிகர் கிருஷ்ணா சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஏற்கனவே பிரபல நடிகர் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை – நுங்கம்பாக்கம் இரவு விடுதியில் மது அருந்தச்சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பிரதீப்குமார், கானா நாட்டைச்சேர்ந்த ஜான், பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, நண்பர்களுக்கும் அளித்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரும், போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, விற்பனை செய்யும் கெவின் என்பவரும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஸ்ரீகிருஷ்ணா என்பவர், கெவின் என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர். அதை அவர் நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார்.
மேலும் போதைப்பொருள் உட்கொள்பவருடன் WhatsApp குழுக்களில் இணைந்து அது சம்மந்தமாக கருத்து பரிமாற்றங்களில், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார்.
இவர்களுடைய வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில் நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் கெவின் ஆகிய இருவரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொக்கைன், ஓஜி கஞ்சா மற்றும் பிற போதைப்பொருளை கடத்துவது, தன் வசம் வைத்திருப்பதும், உட்கொள்வதும், மற்றவர்களுக்கு கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். போதைப்பொருளை வைத்திருப்பவர்களை பற்றிய தகவல் தெரிந்தும். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாக கருதப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது