நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா வழக்கில் அதிரடி தீர்ப்பு

கன்னட திரைப்பட நடிகை சஞ்சனா கல்ராணியை போதைப்பொருள் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுவித்தது.
வழக்கில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கண்டறிந்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கில் சட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தது.
இதனை தொடர்ந்தே நடிகை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சஞ்சனா கல்ராணி 5 ஆண்டு சட்ட போராட்டத்துக்கு பின் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
பெங்களூரு போலீஸின் கீழ் உள்ள மத்திய குற்றப்பிரிவு சஞ்சனாவை கைது செய்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு நடிகைக்கு ஜாமீன் கிடைத்தது.
2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சஞ்சனா போதைப்பொருள் விநியோகம் செய்ததாகக் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சஞ்சனாவுடன் நடிகை ராகினி திவேதி, மலையாளி நியாஸ் முகமது, நைஜீரிய வம்சாவளியினர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். ராகினி திவேதியை கடந்த மாதம் உயர் நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது.
2020 செப்டம்பர் 8ஆம் தேதி சஞ்சனாவின் வீட்டில் சோதனை நடத்திய பிறகு நடிகை கைது செய்யப்பட்டார். போதை விருந்துகளை ஏற்பாடு செய்ததற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்ட ராகுல் ஷெட்டியிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சஞ்சனா கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.