அஸ்வெசும பட்டியலில் இருந்து 04 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீக்கம்
அஸ்வெசும பயனாளிப் பட்டியலில் இருந்து 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தற்காலிகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதமே இக்குடும்பங்களை அஸ்வெசும பட்டியலில் இருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், ‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மேலும் ஆறு மாத காலம் பட்டியலில் நீடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கமைய தற்போது அஸ்வெசும பட்டியலில் எஞ்சியுள்ள ‘அதி வறிய’ மற்றும் ‘வறிய’ பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 13 இலட்சம் குடும்பங்கள் மாத்திரமே இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதன்படி அதி வறிய குடும்பங்களுக்கு 17,500 ரூபாயும், வறிய குடும்பங்களுக்கு 10,000 ரூபாயும் கொடுப்பனவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




