இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜிந்த் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஹரியானா ஆளுநர் அசிம் குமார் கோஷ், முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்ததை அடுத்து, ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து சோனிபட் ரயில் நிலையத்தை நோக்கி ஹைட்ரஜன் ரயில் புறப்பட்டது. ரயிலில் பள்ளி மாணவர்கள் பலரும் பயணித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று ஹரியானாவும், ஜிந்த் பகுதியும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. இங்கிருந்து முதல் ஹைட்ரஜன் ரயிலை நாடு பெற்றுள்ளது.
நாட்டின் முதல் ரயில் மும்பை – தானேவுக்கு இடையே இயக்கப்பட்டது என்ற செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள். அதேபோல், வரும்காலத்தில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் குறித்த செய்தி வரும்போது ஹரியானா, ஜிந்த், பானிபட் ஆகிய பெயர்கள் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது.
நான் ஜிந்த் நகருக்கு வரும்போது எனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. பல பத்தாண்டுகளுக்கு முன்பு நான் அமைப்பு ரீதியிலான பணிகளுக்காக ஜிந்த் வந்தபோது நீங்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் இன்றும் மறக்க முடியாததாக உள்ளது” என தெரிவித்தார்.




