பாலியல் வன்கொடுமை சம்பவம்: இங்கிலாந்தில் போராட்டம், கலவரத்திற்கு எச்சரிக்கை
இங்கிலாந்தின் எப்சம் பகுதியில் ஒரு பெண் பல ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கலவரத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று சர்ரே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலை, லாபிரிந்த் இரவு விடுதியிலிருந்து வெளியேறிய 20 வயது பெண் பின்தொடரப்பட்டு, எப்சம் மெதடிஸ்ட் தேவாலயத்திற்கு வெளியே தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களின் அடையாள விபரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் வீதிகளில் இறங்கினர். இதனால் புதன்கிழமை மாலை, கலவரத் தடுப்புக் காவல்துறையினர் களமிறக்கப்பட்டனர்.
ஆனால், சந்தேக நபர்களைப் பற்றிய தகவல்கள் போதுமானதாக இல்லை என்பதால், விபரங்களை வெளியிட முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது. மக்கள் ஊகங்கள் பரப்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது சிலர் வீதியை மறித்து, காவல்துறையினர்மீது பொருட்கள் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரிகள், அமைதியான போராட்ட உரிமையை மதிப்பதாக தெரிவித்தாலும், சட்ட விரோத நடவடிக்கைகள் மற்றும் பொது அமைதியின்மைக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்தினர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தவும், வியாழக்கிழமை ஒரு சமூக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..





