ரஷ்யாவில் குவிந்த முதலீட்டாளர்கள் : செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீது உக்ரைன் தாக்குதல்!
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ( St Petersburg) புறநகர்ப் பகுதிகளில் உக்ரைன் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முக்கிய பொருளாதார மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 130 நாடுகளில் இருந்து விருந்தினர்கள் வருகை தந்திருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், 59 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மூன்று வெவ்வேறு மாவட்டங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு மாஸ்கோ பதிலடி கொடுக்கும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) கூறினார்.
“எங்கள் பதிலடிகள் திட்டமிட்ட முறையில் இருக்கும்,” என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை மேற்படி தாக்குதல் காரணமாக இணைய சேவைகள் தடைப்பட்டதாகவும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் புல்கோவோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே நேரத்தில் அருகிலுள்ள லாட்வியா மற்றும் எஸ்டோனியாவின் சில பகுதிகளும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
இந்த தாக்குதல் இடம்பெற்ற சிலமணிநேரங்களில் க்ரோன்ஸ்டாட் நகரில் உள்ள எண்ணெய் முனையம் மற்றும் கடற்படைத் தளம் உட்பட ரஷ்யாவில் உள்ள பல இடங்களை உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்கியதை வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ( Volodymyr Zelensky) உறுதிப்படுத்தினார்.




