செம்மணியில் குழந்தைகளின் எம்புத் தொகுதிகள் அடையாளம்!
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளமானது புதிய கட்டளைகளுக்கு அமைய விஸ்தீரணம் செய்யப்பட்டு, அகழ்வு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், நேற்றைய அகழ்வுகளின் போது குழந்தைகளின் எலும்புத் தொகுதிகள் உட்பட மேலும் பல மனித எலும்புத் தொகுதிகள் புதிதாகத் தென்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாம் பகுதியானது, சுமார் மூன்று வார கால இடைவெளிக்குப் பின்னர் கடந்த திங்கட்கிழமை நீதிமன்ற உத்தரவின் பேரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.
இதற்கமைய, செம்மணி அகழ்வாய்வுத் தளமானது நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை முதல் விரிவுபடுத்தப்பட்டு, அதில் ருகுணு பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைச் சிறப்பு மாணவர்கள் அகழ்வு மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலைமையில், புதிதாக விஸ்தரிக்கப்பட்ட குறித்த ஆய்வுப் பகுதியில் குழந்தைகளினுடைய எலும்புத் தொகுதிகள் உட்படப் பல மனித எலும்புத் தொகுதிகள் தெளிவாகத் தென்படத் தொடங்கியுள்ளன.
எனினும், நேற்று அந்த எலும்புத் தொகுதிகளுக்குச் சேதம் ஏற்படாதவாறு அவற்றைச் சுற்றியுள்ள மண் பகுதிகளை அகற்றிச் சுத்தம் செய்யும் நுட்பமான நடவடிக்கைகளே தடயவியல் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.
இன்று குறித்த எலும்புத் தொகுதிகள் அனைத்தும் சட்ட மருத்துவ அதிகாரிகளால் முறைப்படி அடையாளப்படுத்தப்பட்டு, அவற்றுக்கு உத்தியோகபூர்வமாக இலக்கமிடும் பணிகள் நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இடம்பெறவுள்ளன.
அதன் பின்னரே, அந்தப் புதிய பகுதியில் அடையாளம் காணப்பட்ட எலும்புத் தொகுதிகளின் துல்லியமான எண்ணிக்கை மற்றும் ஏனைய விவரங்கள் வெளியாகும் எனத் தடயவியல் தரப்புகள் தெரிவித்துள்ளன.





