யாழ். சங்கவேலி கொலை: இரு சந்தேகநபர்கள் கைது!
யாழ். சங்குவேலிப் பகுதியில் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வந்த முதியவர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு, உடமைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
அத்துடன், கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதியும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை வந்து, சங்குவேலியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த 67 வயதுடைய முதியவரே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
கடந்த மே மாதம் 14ஆம் திகதி நள்ளிரவு, முதியவர் தங்கியிருந்த வீட்டின் புகைக்கூட்டின் வழியாக உள்நுழைந்த கொள்ளையர்கள், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி உட்பட சுமார் 30 பவுண் நகைகளையும், 4 இலட்சம் ரூபா ரொக்கப் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் போது முகங்களைத் துணியால் மூடிக்கட்டி வந்திருந்த கொள்ளையர்கள், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராக்களை அடித்து நொருக்கிய பின்னரே தமது கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.
மேலும், வீட்டில் கொலை மற்றும் கொள்ளைக்கான தடயங்கள் எவையும் சிக்காமல் இருக்கக் கையுறைகளை அணிந்து செயற்பட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி, அங்கிருந்து தப்பிச் செல்லும்போது பொலிஸ் மோப்ப நாய் தங்களைச் சுவடு பிடித்துக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக, வீடு முழுவதும் பெருமளவு மிளகாய்ப் பொடியைத் தூவிப் பொலிஸாரைத் திசைதிருப்பவும் முற்பட்டுள்ளனர்.
இந்தப் படுகொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த மானிப்பாய் பொலிஸார், இன்று அதிகாலை இரு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.




