தோல்வி பயம் : மாகாணசபை தேர்தல் விடயத்தில் சஜித் குற்றச்சாட்டு!
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளால் பீதியடைந்துள்ள ஆளும் அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல்களை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசாங்கம் தற்போது பொதுமக்களை எதிர்கொள்ளத் தயக்கம் காட்டுவதாகவும், அதன் விளைவாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் தயக்கம் நிலவுவதாகவும் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
பொதுத் தேர்தலுக்கும் அதனைத் தொடர்ந்த உள்ளூராட்சித் தேர்தல்களுக்கும் இடையில் அரசாங்கம் சுமார் 23 லட்சம் வாக்குகளை இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் வாக்குகளை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக, மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுவதைத் தடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அனைவருக்குமான வாக்குரிமையைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், ஜனநாயகக் கொள்கைகளைப் பேணுவதன் அவசியத்தையும் வலியுறுத்திய அவர், தேர்தல்கள் மூலம் தங்கள் குரலை வெளிப்படுத்த பொதுமக்கள் தயாராக இருப்பதாகக் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு மாகாண சபை தேர்தல்களை நடத்துவதே மிகவும் பொருத்தமான வழி என்று அவர் மேலும் கூறினார்.





