சுவீடனில் தஞ்சம் கோருவோருக்கு முக்கிய செய்தி!
புலம்பெயர்ந்தோர் தஞ்சம் கோருவதற்கான சட்டவிதிகளில் சில தளர்வுகளை சுவீடன் அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
முன்னதாக புலம்பெயர் குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டாலும் பதின்ம வயதினர் நாடு கடத்தப்பட வாய்ப்பிருந்தது. இதனை சட்டவல்லுநர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
அதாவது தஞ்சம் கோரியபோது தங்கள் பெற்றோருடன் ஸ்வீடனுக்கு வந்த சிறார்கள், 18 வயதை எட்டும்போது நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலமை காணப்பட்டது.
இந்நிலையில் இந்த சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் நாடு கடத்தப்படும் வயது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடு கடத்தப்படும் வயது எல்லை 18 இல் இருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கபட்டபோதிலும் நாட்டைவிட்டு வெளியேறாதவர்கள் நாட்டில் தொடர்ந்து வசிப்பதற்கான புதிய விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இணையம் வழியாகவோ அல்லது தூதரகத்திலோ விண்ணப்பிக்கலாம்.)
முன்னதாக, புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வசிப்பிட அனுமதிகள் வழங்கப்பட்டபோது, அவர்களது குழந்தைகளுக்கும் நிரந்தரமாகத் தங்குவதற்கான உரிமை வழங்கப்பட்டது.
ஆனால் 2021 ஆம் ஆண்டு முதல், குழந்தைகளுக்கு தற்காலிக வசிப்பிட அனுமதிகள் மட்டுமே வழங்கப்பட்டு, அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




