சுயாட்சி நோக்கியே எமது அரசியல் பயணம்: சுமந்திரன் திட்டவட்டம்!
“கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், நாம் மக்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது.” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று (14) உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கட்சியின் புதிய அலுவலகத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், உடுவில் பிரதேச சபை உறுப்பினர் தி. பிரகாஸ், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே. சயந்தன், ச. சுகிர்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தமது உரையின்போது சுமந்திரன் எம்.பி.,
” எமது அரசியல் இலக்கு என்பது சுயாட்சியை நோக்கிய ஒரே நேர்க்கோட்டுப் பாதையில் பயணிக்கின்றது. அதேவேளை, காலவோட்டத்தில் மக்களின் ஏனைய அடிப்படைத் தேவைகளையும் நாம் கவனிக்க வேண்டும்.” – என்றார்.
இளையவர்கள் வேலைவாய்ப்பின்றி வெளிநாடுகளுக்குச் செல்வது கவலையளிப்பதாகவும், அரசியல் இலக்குகளுடன் சேர்த்து இளையவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பிலும் கட்சி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுமந்திரன் வலியுறுத்தினார்.





