மீனவர்கள் மாயம்: கடற்படை நடவடிக்கை எடுக்கவில்லையென உறவுகள் கவலை!
யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தங்கராசா அமல்ராஜ் (வயது 44), செல்வராசா ராஜ்குமார் (வயது 30) என்ற இரண்டு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் கடலில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கரையை வந்தடைந்திருக்க வேண்டும். இருப்பினும் இன்றுவரை திரும்பி வரவில்லை.
அவர்கள் இருவரையும் நேற்றையதினம் (03) இந்திய மீனவர்கள் கடலில் கண்டதாகவும், அவர்களுக்கு சாப்பாடு கொடுத்தாகவும் கூறினர்.
இந்திய எல்லையில் நின்றால் இந்திய கடற்படையினர் கைது செய்து விடுவார்கள் என்றும், ஆகையால் கரையோரமாக செல்வதாகவும் அவர்கள் தங்களுக்கு கூறிவிட்டு சென்றதாக இந்திய மீனவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நாங்கள் கடற்படையினர், பொலிஸார் என அனைவருக்கும் தெரியப்படுத்தியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காணாமல் போன நிலையில் அவரை உலங்குவானூர்தி மூலம் மீட்டனர். அதுபோல இவர்களையும் ஏன் காப்பாற்ற கூடாது? இதுவரை கடற்படை எந்தவொரு தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
இதுவரை 3500 லீட்டர்கள் எரிபொருளை பயன்படுத்தி நாங்களே தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டோம். எல்லை தாண்டி சென்று தேடவும் முடியாது. நாங்கள் தேடி சென்றவேளை இந்திய கடற்படையினர் எங்களை விரட்டினர்.
எனவே அவர்களை உயிருடன் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.





