இலங்கை அருகே ஈரானிய போர் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்? பலர் மாயம்!
இலங்கையை அண்மித்த கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல்மீது, நீர்மூழ்கிக் கப்பலொன்று தாக்குதல் நடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி கப்பலில் 180 பேர் வரையில் இருந்ததாகவும், 78 மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 101 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் அச் செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் 40 மைல் தொலைவில் இன்று அதிகாலை ஈரானிய போர்க்கப்பல் விபத்துக்குள்ளானது.
இது தொடர்பில் இலங்கை கடற் படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து ஈரானிய கடற்படைக் கப்பலின் பணியாளர்கள் இலங்கை கடற்படையின் மீட்புக் குழுக்களால் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை என்றாலும், உயிர்களைக் காப்பாற்றுவது ஒரு பொறுப்பு என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.
இந்த விவகாரம் சர்வதேச மரபுகளின்படி கையாளப்படுகிறது என்றும் கூறினார்.





