இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு – என்ன காரணம் தெரியுமா?
இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக
விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய கிழகில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எழுந்துள்ள நெருக்கடியான நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பேணுவதற்கும் இடையூறுகளை தடுப்பதற்காகவும் பொலிஸ்மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள், அவற்றின் உத்தியோகபூர்வ அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய ஏனைய
இடங்களின் பாதுகாப்பை பலப்படுத்தி விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டிற்கு வருகை தந்துள்ள மற்றும் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணித்தியாலமும் செயற்படும் வகையிலான பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்கீழ் அவர்கள் தங்கியிருக்கும் இடங்கள், வர்த்தக நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவை ஏற்பட்டால் இந்த பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முப்படையினரின் உதவியைப்
பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





