இரட்டை குடியுரிமையாளர்கள் கவனத்திற்கு – அடுத்த வாரம் முதல் அமுலாகும் புதிய நடைமுறை
2026 முதல் இரட்டை பிரித்தானிய குடியுரிமையாளர்களுக்கு புதிய எல்லை விதி – என்ன மாற்றம்?
வெளிநாடுகளில் வாழும் இரட்டை குடியுரிமை பெற்ற பிரித்தானியர்களுக்கு வரவிருக்கும் மாற்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. “நாம் பிரித்தானிய குடிமக்கள் அவ்வாறிருக்கமையில் நம் சொந்த நாட்டுக்குள் நுழைய கூடுதல் ஆவணம் ஏன்?” என்ற சந்தேகம் பலரிடமும் உருவாகியுள்ளது.
2026 பெப்ரவரி 25 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய எல்லை கட்டுப்பாட்டு நடைமுறைகள், குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
பாதுகாப்பு மற்றும் மின்னணு எல்லை மேம்பாடு (Digital Border Modernisation) என்ற நோக்கில் பிரித்தானியா உள்துறை அலுவலகம் கொண்டு வரும் இந்த மாற்றம், நடைமுறையில் எப்படி செயல்படும்? யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்? என்பதையே இந்த கட்டுரை ஆராய்கிறது.
வெளிநாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான பிரித்தானிய இரட்டை குடியுரிமையாளர்களை நேரடியாக பாதிக்கக்கூடிய புதிய எல்லை கட்டுப்பாட்டு மாற்றங்களை பிரித்தானிய உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் எதிர்வரும் 25 ஆம் தி்கதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரித்தானியா + இலங்கை,
பிரித்தானியா + ஸ்பெயின், பிரித்தானியா + இத்தாலி போன்ற இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு மிகவும் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இதுவரை பல இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தங்களுடைய ஏனைய நாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்துக்கு பயணம் செய்து வந்துள்ளனர். குறிப்பாக ஐரோப்பாவில் வசிப்பவர்கள் இந்த முறையை சுலபமாக பின்பற்றியுள்ளனர்.
ஆனால் புதிய விதிகளின்படி, 2026 பெப்ரவரி 25 க்கு பின்னர் ஐக்கிய இராச்சியத்துக்கு பயணம் செய்யும் அனைத்து இரட்டை பிரித்தானிய குடிமக்களும் கட்டாயமாக செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டு காட்ட வேண்டும்.
பிரித்தானிய கடவுச்சீட்டு இல்லையெனில் “உரிமைச் சான்றிதழ்” (Certificate of Entitlement) எனப்படும் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த இரண்டு ஆவணங்களில் எதுவும் இல்லையெனில், விமானம், கப்பல் அல்லது ரயில் சேவைகளில் ஏறும் நிலையிலேயே (Boarding Gate) அனுமதி மறுக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
“உரிமைச் சான்றிதழ்” (Certificate of Entitlement) என்பது உங்கள் ஏனைய நாட்டுக் கடவுச்சீட்டுடன் இணைக்கப்படும் ஒரு உத்தியோகப்பூரவ ஆவணம் ஆகும். நீங்கள் பிரித்தானிய குடிமகன் என்பதை நிரூபிக்க இது பயன்படுத்தப்படுகிறது. இந்த சான்றிதழுக்கான கட்டணம் சுமார் £589 ஆகும். ஒரு குடும்பத்தில் பலர் இருந்தால், மொத்த செலவு ஆயிரக்கணக்கில் உயரக்கூடும் என்பதால் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஐக்கிய இராச்சியத்திற்கு குறுகிய கால விஜயத்திற்காக வரும் பிரித்தானியர் அல்லது ஐரிஷ் அல்லாத பயணிகள் மின்னணு பயண அனுமதி (Electronic Travel Authorisation – ETA) பெற வேண்டும். இதற்கான கட்டணம் £16 முதல் £20 வரை இருக்கும். ஆனால் முக்கியமாக, இரட்டை பிரித்தானிய குடிமக்கள் மின்னணு பயண அனுமதிக்கு (ETA) விண்ணப்பிக்க முடியாது. அவர்கள் கட்டாயமாக பிரித்தானிய கடவுச்சீட்டு (British Passport) அல்லது உரிமைச் சான்றிதழ் (Certificate of Entitlement) ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
The Guardian வெளியிட்ட தகவலின்படி, ஜெர்மனியில் வசிக்கும் ஒரு இரட்டை குடியுரிமை பெற்ற பெண், தனது குழந்தைகள் ஐக்கிய இராச்சியத்துக்கு வர முடியாமல் போய்விடுமோ என்ற கவலை வெளியிட்டுள்ளார். மேலும், பிரெக்சிட் (Brexit) பிறகு ஸ்பெயின் குடியுரிமை பெற்ற சிலர், பிரித்தானிய கடவுச்சீட்டு (British Passport) பயன்படுத்துவது சட்ட சிக்கலை உருவாக்குமோ என்ற அச்சத்தையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் லண்டனில் பிறந்த ஒரு பிரித்தானிய–இத்தாலிய நபர், ஒருபோதும் பிரித்தானிய கடவுச்சீட்டு பெறாமல் இத்தாலிய கடவுச்சீட்டு (Italian Passport) பயன்படுத்தியே பயணம் செய்து வந்ததாகவும், புதிய விதிகளால் ஐக்கிய இராச்சியத்துக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்படும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.
அரசு தரப்பில், பிரித்தானிய உள்துறை அலுவலகம் இது ஒரு மின்னணு எல்லை மேம்பாட்டு திட்டத்தின் (Digital Border Modernisation) ஒரு பகுதியாகும் என்றும், நாட்டுக்குள் வருவோரின் விபரங்களை முழுமையாக கண்காணித்து பாதுகாப்பை அதிகரிப்பதே நோக்கம் என்றும் விளக்கமளித்துள்ளது. தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும், அச்சுறுத்தல்களை தடுப்பதற்கும் இந்த மாற்றம் அவசியம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் the3million அமைப்பு, £589 செலவாகும் உரிமைச் சான்றிதழுக்கு (Certificate of Entitlement) பதிலாக குறைந்த கட்டணத்தில் ஒருமுறை பயண அனுமதி வழங்கும் மாற்று முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இரட்டை குடியுரிமையாளர்கள் தங்களுடைய ஆவணங்கள் செல்லுபடியாக உள்ளதா என்பதை உடனடியாக சரிபார்த்து, 2026 பெப்ரவரி 25க்கு பிறகு பயணம் செய்யும் முன் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் சாதாரண தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல. வெளிநாடுகளில் வாழும் பல குடும்பங்களின் பயணத் திட்டங்களையும், செலவுத் திட்டங்களையும் பாதிக்கக்கூடியவை. பிரித்தானிய கடவுச்சீட்டு (British Passport) அல்லது உரிமைச் சான்றிதழ் (Certificate of Entitlement) இல்லையெனில் பயணம் சிக்கலாக மாறும் சூழல் உருவாகிறது.
அரசு தரப்பில் இது பாதுகாப்பு வலுப்படுத்தும் முயற்சி என விளக்கப்படுகின்றபோதும், பொதுமக்கள் தரப்பில் செலவு மற்றும் நடைமுறை சிக்கல்கள் குறித்து கவலை நீடிக்கிறது.
முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால், விமான நிலையத்தில் இறுதி நிமிட பிரச்சனைகளை தவிர்க்க முடியும். விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையும் இப்போது மிகவும் அவசியமாகியுள்ளது.





