பாதீடு தொடர்பில் நவம்பர் 14 இல் முதல் பலப்பரீட்சை!
2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை தேசிய மக்கள் சக்தி நாளை மறுதினம் 14 ஆம் திகதி எதிர்கொள்கின்றது.
2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 7 ஆம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.
2 ஆம் வாசிப்புமீதான விவாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. 14 ஆம் திகதிவரை விவாதம் நடைபெறும். 14 ஆம் திகதி மாலை 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதன்போது எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன எதிராக வாக்களிக்கும் என தெரியவருகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது நிலைப்பாட்டை நாளை அறிவிக்கவுள்ளன.
பாதீட்டை நிறைவேற்றிக்கொள்வதற்குரிய பெரும்பான்மைபலம் தன்வசம் உள்ளபோதிலும், எதிரணிகளும் வரவு- செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
அதேவேளை, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும். பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி நடைபெறும்.





