சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணி மரணம்! இத்தாலி புறப்பட்ட விமானத்தில் நடந்த சோகம்
இத்தாலியின் மிலான் (Milan) நகரம் நோக்கிச் சென்ற சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் (Singapore Airlines – SQ378) ஒன்றில் பயணித்த நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பயணி மருத்துவ அவசரநிலையால் மரணமடைந்ததாக 8 World செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சுமார் 2 மணி நேரத்தில் மருத்துவ அவசரம் ஏற்பட்டதாகவும், விமானத்தில் மருத்துவர்கள் யாராவது இருந்தால் உதவ வருமாறும் அறிவிப்பு வெளியானதெனவும், விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் வெய் ஜுன்தாவ் (Dr. Wei Juntao) 8 World செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அறிவிப்பு வந்தவுடன் தானும் மேலும் இரண்டு மருத்துவர்களும் உதவி செய்ய முன்வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, நடுத்தர வயதுடைய அந்தப் பயணி சுயநினைவின்றித் தரையில் படுத்திருந்தார். அவருக்கு நாடித் துடிப்பு இல்லை.
மூன்று மருத்துவர்களும் உடனடியாக அவருக்கு அவசர உயிர்காப்புச் சிகிச்சையை (CPR) அளித்தனர். எனினும், அந்தச் சிகிச்சை பலனளிக்கவில்லை.
மரணமடைந்த அந்தப் பயணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரியவந்ததாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, உயிரிழந்த அந்தப் பயணியின் மனைவியும் அதே விமானத்தில் உடன் பயணம் செய்திருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்துச் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் 8 World விளக்கம் கேட்டுள்ளது.





