சட்டவிரோத பந்தய செயலி: யுவராஜ் சிங்,சோனு சூட், ராபின் உத்தப்பா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ள அமலாக்கத்துறை

இணையச் சூதாட்டச் செயலிகள் மூலம் சட்டவிரோதமாக ரூ. 2,000 கோடி அளவுக்குப் பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக இந்தியா முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இணையச் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவண் உள்ளிட்ட 29 பிரபலங்கள்மீது ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த வழக்கில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா, திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிமி சக்ரவர்த்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பி இருந்தது.
இந்த வழக்கில், பாலிவுட் நடிகர் சோனு சூட், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பி உள்ளது.
மூவருக்கும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) அழைப்பாணை அனுப்பப்பட்டது.அழைப்பாணைப்படி செப்டம்பர் 22ஆம் திகதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ராபின் உத்தப்பா முன்னிலையாக வேண்டும்.
யுவராஜ் சிங் செப்டம்பர் 23ஆம் திகதியும், நடிகர் சோனு சூட் 24ஆம் திகதியும் முன்னிலையாக வேண்டும் என்று அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.