காசாவை கைப்பற்றினாலும் இஸ்ரேலுடன் இணைக்கும் எண்ணமில்லை – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

காசாவை கைப்பற்றினாலும் இஸ்ரேலுடன் இணைக்கும் எண்ணமில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அதை இடைக்கால நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்க விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2023ல் போர் துவங்கியது.
இந்த போரில் ஹமாஸ் பயங்கரவாதிகள், காசாவைச் சேர்ந்த பொதுமக்கள் என 60,000க்கும் மேற்பட்டோர் உயிர்இழந்துள்ளனர். காசாவின் பெரும் பகுதி இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இருப்பினும் இஸ்ரேலில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட 251 பிணைக் கைதிகளில் இன்னும் 20க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் வசம் உள்ளனர். அதில் ஒருவரை பட்டினி போட்டு அவரை வீடியோ எடுத்து ஹமாஸ் சமீபத்தில் வெளியிட்டது சர்ச்சையானது.
இந் நிலையில், காசா விவகாரத்தில் எதிர்கால திட்டம் என்ன என்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று கூறியுள்ளதாவது:
ஹமாஸை முழுமையாக அழிப்பது மற்றும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் அனைவரையும் மீட்பதே போரின் முதன்மை நோக்கங்கள்.
ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தால், போர் நாளையே கூட முடிவடையலாம்.
போருக்குப் பிந்தைய திட்டத்தின் ஒரு பகுதியாக, காசாவிற்குள் ஒரு பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும். இது எதிர்கால அச்சுறுத்தல்களை தடுக்கும்.
காசாவை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்திருக்காது. இஸ்ரேலுடனும் இணைக்காது. அதற்கு பதில் சர்வதேச இடைக்கால நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்க விரும்புகிறேன் என அவர் கூறினார்.