பிரித்தானியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சம் நிலவுகிறது – புதிய ஆய்வில் தகவல்
பிரித்தானியாவில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரபட்சம் நிலவுவதாகவும், முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் அமைதியாக இணைந்து வாழ முடியும் என்றும் பெரும்பாலான பிரித்தானியர்கள் கூறுகின்றனர்.
சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின்படி, பிரித்தானிய பொதுமக்களில் 17 சதவீதம் பேர் முஸ்லிம் மக்கள்தொகையின் வளர்ச்சி நாட்டின் கலாச்சாரத்திற்கு ஒரு அடிப்படை அச்சுறுத்தல் என்று நம்புகிறார்கள்.
அதே நேரத்தில் 19 சதவீதம் பேர் இந்த நாட்டில் பிறந்த முஸ்லிம்கள் வெள்ளையர்களைப் போல பிரித்தானியர்கள் அல்ல என்று உடன்படவில்லை.
கணக்கெடுப்பின்படி, பிரித்தானிய நகரங்களிலும் பெருநகரங்களிலும் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் அமைதியாக இணைந்து வாழ முடியும் என்பதை 57 சதவீத மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
சமூகத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரபட்சம் நிலவுவதாக 63 சதவீத மக்கள் ஒப்புக்கொண்ட நிலையில், இந்தப் பாரபட்சத்தை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை 61 சதவீத மக்கள் ஆதரிப்பதாகத் தெரிவித்தனர்.
கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்காத வரையில், முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு கொண்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 41 சதவீதத்தினரைக் கொண்ட மற்றொரு குழு தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களில் 73 வீதம் பேர், பிரித்தானியா முஸ்லிம்கள் வாழ்வதற்கு ஒரு நல்ல இடம் என்று கூறியுள்ளனர்; அதே நேரத்தில் 67 வீதம் பேர் தங்களின் பிரித்தானிய அடையாளம் குறித்து நேர்மறையான உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரிட்டனில் பிறந்த முஸ்லிம்களில் 70 சதவீதம் பேர், வெள்ளையின மக்களைப் போலவே தங்களையும் பிரித்தானியர்களாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் 61 சதவீத முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் அடிப்படையில் மட்டுமே பாகுபாட்டை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், 69 சதவீத முஸ்லிம்கள், குறிப்பாகப் பெண்கள், கடந்த ஆண்டு நடந்த சில வலதுசாரி போராட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு தங்களுக்குப் பாதுகாப்பு குறைந்ததாக உணர்ந்ததாக நம்புகின்றனர்.
கிளாஸ்கோ நகர மன்றத்தின் துணை மேயர் ஹனிஃப் ராஜா, சமூகத்தின் ஒரு பிரிவினரை அவர்களின் மதத்தின் அடிப்படையில் குறிவைப்பது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல என்று தெரிவித்துள்ளார்.




