நம்பகத்தன்மையை இழக்கும் ஐரோப்பிய ஒன்றியம்! ஸ்பெயின் குற்றச்சாட்டு!
இஸ்ரேல் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது என ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரெஸ் ( Jose Manuel Albares) குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பயன்படுத்தும் அதே கொள்கைகளை இஸ்ரேல் மீது பயன்படுத்த தவறினால் ஐரோப்பிய ஒன்றியம் அதன் நம்பகத்தன்மையை இழக்கும் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
சர்வதேச சட்ட மீறல்கள் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், இஸ்ரேலுடனான தனது கூட்டமைப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை அவர் வலியுறுத்தினார்.
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியம்-இஸ்ரேல் ஒப்பந்தத்தில் உள்ள மனித உரிமைகள் பிரிவுகளை மேற்கோள் காட்டிய அவர், காசா, மேற்குக் கரை மற்றும் லெபனானில் தொடரும் வன்முறைகளை கண்டித்துள்ளார்.
இதேவேளை இஸ்ரேலியப் பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தைகளில் முன்னுரிமை அணுகலை வழங்கும், இஸ்ரேலுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டமைப்பு ஒப்பந்தம் குறித்து மீண்டும் விவாதிக்க வேண்டும் என்று ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் சுலோவீனியா ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




