இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதியின் கொள்கை விளக்க பிரகடன உரை: முழு வடிவம்!

சர்ச்சையை ஏற்படுத்திய குற்றங்கள் குறித்து மீண்டும் விசாரணைகளை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சபையில் தெரிவித்துள்ளார்.

தனது கொள்கை விளக்க பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும்  கருத்து வெளியிட்ட அவர்,

இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை.

எந்தவொரு மதவாதத்திற்கும் இடமில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“ஆனால் எமது நாட்டில் மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத, கோசங்களை கட்டியெழுப்ப எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என உறுதியளிக்கிறேன்”

அனைவரும் மக்கள் பிரதிநிதிகள் என்றால், நாடாளுமன்றத்தில் கூறப்படும் அனைத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

“வினைத்திறன் மிக்க அரச சேவை, மக்களின் நலனுக்காகச் செயற்படும் பொதுச் சேவை, இந்த நாட்டில் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என நாங்கள் நம்புகின்றோம். அதற்காக அரச ஊழியர்களிடமிருந்தே எமக்கு பலமான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். அதில் கவனம் செலுத்தியுள்ளோம்”

இனம், மதம், மொழியின் அடிப்படையில் யாரும் தனிமைப்படுத்தப்படக்கூடாது

ஒவ்வொரு பிரஜையும் அவரவர் மதம், கலாசாரம் மற்றும் மொழியின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்படக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“அரசியல் மாற்றங்கள் இருக்கலாம். சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, அனைவருக்கும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாத சுதந்திர ஜனநாயக அரசை உருவாக்குவது நமது பொறுப்பாகும். அதை நாங்கள் உருவாக்குவோம் என்பதை உறுதியளிக்கிறோம்.”

கடந்தகாலங்களில் இடம்பெற்ற குற்றங்களுக்கு தீர்வு

“சட்டம் அமுல்படுத்தப்படுவதை மக்கள் உணர வேண்டும். சட்டத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை உடைத்தெறிவதே சமீப காலமாக நாட்டில் நடந்துள்ளது. சட்டம், ஒழுங்கு மீது பொதுமக்களின் நம்பிக்கை தகர்ந்து விட்டது. இதற்குப் பிறகு யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அனைவரும் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். சட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.”

கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய குற்றச் செயல்கள் தொடர்பில் மீள விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

“நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள், அதற்கு காரணமானவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். சட்டத்தையும் நீதியையும் அனுமதிக்கும் ஒரு அரசு நமக்குத் தேவை”

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம்

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட முடியும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னோக்கி செல்லும் பயணத்தில் இது மிகவும் முக்கியமான படியாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

“பொருளாதாரம் மிகவும் நுணுக்கமாக வீழ்ச்சியடைய அனுமதிக்காமல் எல்லா பக்கங்களிலும் இருந்து சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். இந்த பொருளாதாரம் தவறு செய்ய எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.எனவே ஒவ்வொரு நுட்பமான இடத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்”

புதிய பொருளாதார மூலோபாயத்தில் பிரவேசிக்கப்பட வேண்டும் என்றும் அது மூன்று பகுதிகளைக் கொண்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“முதலாவதாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் விரைவான வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் அவசியம். அப்படியானால் அந்த பொருளாதாரத்தில் மக்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதே அந்த பொருளாதாரத்தின் அடுத்த பண்பு.மக்கள் ஒதுக்கப்பட்ட பொருளாதாரத்தால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை.

பொருளாதாரத்தின் ஒவ்வொரு செயல்முறையிலும் மக்கள் தங்கள் திறனைப் பொறுத்து பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக இருக்க வேண்டும். மூன்றாவது குணாதிசயம் என்னவென்றால், நாம் எவ்வளவுதான் தேசியச் செல்வத்தை உருவாக்கினாலும், அந்தச் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிந்தால், அது அரசை நிலைப்படுத்தாது.பொருளாதார பலன்கள் நியாயமான முறையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.”

எரிசக்தி சந்தை

எரிசக்தி சந்தை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இது மிகவும் உணர்ச்சிகரமான இடம் என்றும், நிதிச் சந்தையும் அத்தகைய முக்கியமான இடம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இதன்படி, அரச பங்காக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், சிதறிய சந்தைக்குப் பதிலாக சந்தை ஒழுங்குபடுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கூட்டுறவு வலையமைப்பை மீண்டும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து 8 மில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

5 வருடங்களுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய நிபுணர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்

எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி 10 ஆவது பாராளுமன்ற அமர்வின் போது தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும்,  அக்டோபர் முதல் அனைத்து ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகளிலும் 3,000 ரூபாய்  சேர்க்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை