அமைதி ஒப்பந்தம்: இஸ்ரேல் நிதி அமைச்சர் போர்க்கொடி!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள அமைதி உடன்பாட்டிற்கு எதிராக இஸ்ரேலின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) மற்றும் யாஷர் (Yashar) கட்சியின் தலைவரான காடி ஐசன்கோட் (Gadi Eisenkot) ஆகியோரே இவ்வாறு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
“இது ஒரு தோல்வியடைந்த அரசாங்கத்தின் மோசமான முடிவாகும்.
பிரதமர் நெதன்யாகு வழங்கி வந்த ‘முழுமையான வெற்றி’ என்ற வெற்று வாக்குறுதிகளுக்கும், தற்போது உருவாகியுள்ள இந்த உடன்பாட்டிற்கும் இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி உள்ளது.” – என்று யாஷர் கட்சித் தலைவர் விளாசித்தள்ளியுள்ளார்.
அதேவேளை, இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்த உடன்பாட்டை முற்றாக நிராகரித்துள்ளார்.
“இந்த உடன்பாடு இஸ்ரேலுக்கும், ஒட்டுமொத்த சுதந்திர உலகிற்கும் எதிரானது. அவ்வளவுதான்!” என்று அவர் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய ஆட்சியை வீழ்த்துவதற்கும், டெஹ்ரான் அணு ஆயுதங்களை ஒருபோதும் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இஸ்ரேல் தனது சொந்த முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதேவேளையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அரசாங்கத்தையும் பிரதமர் நெதன்யாகுவையும் அவர் பாதுகாத்துப் பேசினார்.
“தற்போது இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீதும், தலைவர் நெதன்யாகு மீதும் சர்வதேச அளவில் செலுத்தப்படும் அழுத்தங்களில் 10 சதவீதத்தைக்கூட, அவருக்குப் பதிலாகப் பிரதமர் பதவியைக் கைப்பற்றத் துடிக்கும் வேறு எந்தவொரு தலைவராலும் தாங்கிக்கொள்ள முடியாது” என்று நிதி அமைச்சர் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார்.





