ஹிஸ்புல்லா இலக்குகள்மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!
ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்த நிலையில், லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
லெபனானின் கிழக்குப்பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலிய படையினர், ராணுவ ஆயுதங்கள், ராணுவ முகாம்கள் மற்றும் கட்டடங்களைக் குறிவைத்து 22 ட்ரோன் ற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
லெபனானும் இஸ்ரேலும் 45 நாள் போர்நிறுத்தத்தை நீட்டிக்க இம்மாத ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட போதிலும், ஆங்காங்கே மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை போர் தொடர்பில் கருத்து வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்,
“இஸ்ரேல், ஹிஸ்புல்லாவுடன் போரில் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு முறியடிக்க முடியாத பலத்த அடியைக் கொடுக்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்களில் 600-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தற்போதைய சூழ்நிலை நாம் தாக்குதல்களின் தீவிரத்தை மேலும் அதிகரிப்பதைக் கோருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் வலதுசாரி அமைச்சர்களான பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் இடாமர் பென் கிவிர் ஆகியோர், இந்த இராணுவத் தாக்குதலை லெபனான் தலைநகர் பெய்ரூட் வரை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.




