அமெரிக்கா, மெக்சிகோ, கனடா மீது ஏற்றுமதி கட்டுப்பாடு – சீனா அறிவிப்பு!
சீனா ஃபென்டானில் (Fentanyl) தயாரிப்புக்கான மூன்று மூல வேதிப்பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை இன்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவிற்கு அவற்றின் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
செயற்கை போதைப்பொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம், செயற்கை போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய மேலும் எட்டு வேதிப்பொருட்கள் குறித்து எச்சரித்து, வணிக நிறுவனங்கள் கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஃபென்டானில் முன்னோடிப் பொருட்களின் வேதிப்பொருட்களை கட்டுப்படுத்த பெய்ஜிங் தவறியுள்ளதாக ட்ரம்ப் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஃபென்டானில் என்பது மார்பினை விட சுமார் 100 மடங்கு வலிமையான ஒரு சக்திவாய்ந்த செயற்கை ஓபியாய்டு ஆகும். கடுமையான வலி நிவாரணம் மற்றும் மயக்க மருந்துக்காக இது பயன்படுத்தப்படுகிறது. இது மருத்துவ ரீதியாகப் பரிந்துரைக்கப்பட்டாலும், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் ஃபென்டானில் மிகவும் ஆபத்தானது மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கதிகமான மருந்தளவுகளால் ஏற்படும் மரணங்களுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.




