ஈரானுக்கு ஆதரவு : 69 பேரின் குடியுரிமை பறிப்பு!
ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டின் கீழ் 69 பேரின் குடியுரிமையை பஹ்ரைன் அரசு பறித்துள்ளது.
அரசின் இந் நடவடிக்கையானது ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த ஷியா முஸ்லிம்களை ஆபத்தில் ஆழ்த்தும் என்று மனித உரிமைக் குழு எச்சரித்துள்ளது.
குடியுரிமை ரத்து செய்யப்பட்ட 69 பேரில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அடங்குவதாக பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், “ஈரானின் விரோதச் செயல்களைப் புகழ்ந்ததற்காகவோ அல்லது அவற்றுடன் அனுதாபம் கொண்டதற்காகவோ, அல்லது வெளித் தரப்பினருடன் தொடர்புகளில் ஈடுபட்டதற்காகவோ, அந்த நபர்களிடமிருந்து பஹ்ரைன் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





