தமிழகத்தில் அமைதி கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு
தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான 23 ஆம் திகதி மாலை 6 மணி வரையிலான 48 மணி நேர அமைதி கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலையுடன் தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்ந்த நிலையில், இன்று காலை முதல் திமுக தலைவரும்,
தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சென்னையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின், ஆட்டோ ஓட்டியும், இளைஞர்களிடம் செல்ஃபி எடுத்தும் உற்சாகமாக பிரச்சாரம் செய்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தான் போட்டியிடும் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தான் போட்டியிடும் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில்
வாகனப்பேரணி சென்று வாக்கு சேகரித்தார். இன்று மாலையில் காரைக்குடி பாண்டியன் திரையரங்கம் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில்
கலந்துகொண்டு பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். நந்தனத்தில் நடந்த பிரச்சாரத்தில்
விஜய் கலந்துகொண்டு பேசினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான
தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
234 தொகுதிகளிலும் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணியில் 83,875 பொலிஸார், 40,427 அரசுஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை இராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.





