ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ஆதரவாக வடகொரியா களத்தில்!
ஈரானின் புதிய உச்ச தலைவரை அமெரிக்கா, இஸ்ரேல் என்பன குறி வைத்துள்ள நிலையில், புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வட கொரியா மதிக்கிறது என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானின் புதிய உச்ச தலைவர் நியமனத்தை சீனா மற்றும் ரஷ்யா என்பன ஏற்றிருந்த நிலையிலேயே வடகொரியாவும் ஆதரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
இந்நிலையில் தமது தலையீட்டுடனேயே புதிய உச்ச தலைவர் நியமனம் இடம்பெற வேண்டும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதற்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஈரானின் புதிய உச்ச தலைவர் தொடர்பில் வடகொரியா தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
“ ஈரானிய மக்கள் தங்கள் உச்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகளையும் விருப்பத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு அடித்தளங்களை அழித்து வருகின்றன. மேலும், உலகளவில் ஸ்திரமின்மையை அதிகரித்து வருகின்றன.
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் அரசியல் அமைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறியதுடன், அதன் சமூக அமைப்பை அழிக்கவும் முயற்சிக்கிறது.
இத்தகைய நடவடிக்கைகளை உலக நாடுகள் கண்டிக்கவும், நிராகரிக்கவும் வேண்டும். ஏனெனில் இவற்றை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது” எனவும் வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.





