யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனை – வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜதுர்சன் (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இன்று திங்கட்கிழமை காலை, அந்த வீட்டின் பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார். உயிரிழந்து சில நாள்கள் ஆகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன், ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
பின்னர், சடலத்தைப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும், முறையான பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் மருதங்கேணி பொலிஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த விபரீத முடிவுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





