வழக்குத் தாமதங்களை நிவர்த்தி செய்ய 07 புதிய நீதிமன்றங்கள்
நீதிமன்ற வழக்குகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் வகையில் 07 புதிய நீதிமன்றங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“தற்போது நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இது கடந்த 15 வருடங்களாக நிலவி வரும் ஒரு நிலையாகும்.
2024 ஆம் ஆண்டளவில் நீதித்துறையில் 4,422 ஊழியர்களுக்கான பற்றாக்குறை நிலவியது. தற்போது இதனை நிவர்த்தி செய்ய 4,130 புதிய ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மேலும் இரண்டு நீதிமன்றங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளன. அத்துடன், அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் மேலும் 05 நீதிமன்றங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
நீதித்துறை நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். முதற்கட்டமாக மாகாண நீதிமன்றங்களில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதைக் குறைத்து, துரிதமாக தீர்ப்புகளை வழங்குவதன் மூலம் நீதிமன்ற நெரிசலைக் குறைக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.





