AI மாநாட்டில் பில் கேட்ஸின் உரை ரத்து: பின்னணி என்ன?
இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு AI தாக்க உச்சி மாநாட்டில் ஆற்றவிருந்த முக்கிய உரையை பில் கேட்ஸ் Bill Gates இரத்து செய்துள்ளார்.
இது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், கேட்ஸ் அறக்கட்டளை Gates Foundation விசேட அறிக்கையொன்றின் ஊடாக விளக்கமளித்துள்ளது.
“ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டின் முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்துவதற்காக பில் கேட்ஸ் தனது முக்கிய உரையை நிகழ்த்த மாட்டார்.
மிகவும் கவனமாக பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு இலக்குகளை முன்னேற்றுவதற்கான எங்கள் பணிகளை மேற்கொள்ள கேட்ஸ் அறக்கட்டளை முழுமையாக உறுதிபூண்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், கடந்த 16-ம் திகதி செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு ஆரம்பமானது. நாளை 20 ஆம் திகதிவரை இந்த மாநாடு நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்த இருந்தார். எனினும், அவரது உரை தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவரும் நிதி ஆலோசகருமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் உடனான பில் கேட்ஸ்-ன் நட்புறவு தொடர்பான கோப்புகள் வெளிவந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.





