கால்நடைகளைக் களவாடி இறைச்சியாக்கும் கும்பல்: கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்!
கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை கைது செய்யுமாறு வலியுறுத்தி யாழ். வேலணையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினரால் இன்று முற்பகல் 10 மணியளவில் வேலணை வங்ககாவடியில் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வங்களாவடி சந்தியில் ஆரம்பமான குறித்த போராட்டம் நடைபவனியாக வேலணை பிரதேச செயலகம்வரை சென்றது.
“வறிய பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே”
“சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்த பொலிசாருக்கு துணைநிற்போம்”
” வாழ்வாதாரத்தை பறிக்காதே”
“ஊர் கூடித் திருட்டை ஒழிப்போம்”
உள்ளிட்ட பல்வேறு கோசங்களுடன் பேரணியாக சென்றனர்.
பிரதேச செயலர் தனபாலசிங்கம் அகிலனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்திருந்தனர்.
இது தொடர்பில் போராட்டக்காரர்கள் கூறியவை வருமாறு,
“யாழ் மாவட்டத்தின் ஏனைய இடங்களிலும் மாடு கடத்தல், இறைச்சியாக்கல பிரச்சினை இருக்கின்றது. எனினும், தீவகத்தில் இது பாரதூரமாக உருவெடுத்துள்ளது.
வேலணை பிரதேசத்தில் 420 இற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பண்ணையாளர்கள் இருக்கின்றனர்.
அல்லைப்பிட்டி பகுதியில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் திருட்டுக் கும்பல்களால் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்பட்டுவிட்டன.
.
அத்துடன் ஒட்டுமொத்த வேலணையை எடுத்துக்கொண்டால் அது 30 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதில் நல்லின கறவை மாடுகளும் அடங்கும்.” – என்று சுட்டிக்காட்டினர்.






