ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டின் மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும் – மிரட்டும் ட்ரம்ப்!
ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அணுசக்தி தொடர்பில் ஓமானில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இந்த செய்தி வந்துள்ளது.
இருப்பினும் எத்தனை வீதம் வரி விதிக்கப்படும் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் சுமார் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானிடமிருந்து பொருட்கள் அல்லது சேவைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாங்கும், இறக்குமதி செய்யும் அல்லது வேறுவிதமாகப் பெற்று அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று அமெரிக்கா கூறுகிறது.
இந்த சமீபத்திய நிர்வாக உத்தரவு “ஈரானுக்கு எதிரான தேசிய அவசரநிலையை” மீண்டும் உறுதிப்படுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும் சூழ்நிலைகள் மாறும்போது ட்ரம்ப் இதனை மாற்றி எழுதுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





