அமைதிக்காக்கும் பணிகளுக்காக சென்ற விமானப்படை வீரர்கள்
மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக, இலங்கை விமானப்படையின் 11-வது விசேட படைப்பிரிவு இன்று (ஜனவரி 21) அதிகாலை நாட்டை விட்டுப் புறப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்தப் படைப்பிரிவிற்கு குரூப் கெப்டன் ஆசிரி பத்திரகே தலைமை தாங்குகின்றார்.
மொத்தம் 110 உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் புதிய அணியில், இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து விமானப்படை வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டுள்ளமை ஒரு விசேட அம்சமாகும்.
இதேவேளை, மத்திய ஆபிரிக்கக் குடியரசில் தமது பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 10-வது படைப்பிரிவைச் சேர்ந்த 94 வீரர்கள் இன்று மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.
புறப்பட்டுச் சென்ற வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும், நாடு திரும்பிய குழுவினரை வரவேற்கவும் விமானப்படை திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் தேஷப்பிரிய சில்வா உள்ளிட்ட உயரதிகாரிகள் கட்டுநாயக்கவில் கூடியிருந்தனர்.
நீண்ட காலம் பிரிந்திருந்த தமது குடும்ப உறுப்பினர்களைக் கண்ட மகிழ்ச்சியில் வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டதைக் காணமுடிந்தது.





