அநுர அரசின் அடுத்த அதிரடி: எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய அரச பேரவையின் 1971 ஆம் ஆண்டின் 01 ஆம இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரச கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘வளமான நாடு- அழகான வாழ்க்கை’ எனும் தொலைநோக்குக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் அரசு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய, நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவர்களுடைய துணைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள ஓய்வூதிய உரித்தை இரத்துச் செய்யும் நோக்கில் நாடாளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை நீக்குவதற்காக சட்டவரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காகவும் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” – என்றார்.





