சுமந்திரனை சந்தித்த நாமல் – நுகேகொடை பேரணி குறித்து விளக்கம்!
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்து, நவம்பர் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி பேரணி குறித்து விளக்கினார்.
இது தொடர்பில் ‘X’ தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள 21 ஆம் திகதி பொது பேரணி மற்றும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது குறித்து சுமந்திரனுக்கு விளக்கியதாக தெரிவித்துள்ளார்.
“ITAK பேரணியில் பங்கேற்கவில்லை என்றாலும், ஒரு முக்கிய எதிர்க்கட்சியாக, நிகழ்ச்சி நிரல் மற்றும் நாங்கள் தீர்க்கும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துவது எங்களுக்கு முக்கியம்,” என்றும் அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து தாமதமாகி வரும் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள், மேலும் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை இரு கட்சிகளும் பகிர்ந்து கொண்டதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.




