காஷ்மீரில் பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்களால் ஏற்பட்ட பேராபத்து – பலர் உயிரிழப்பு!
இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம் ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் குறைந்தது 09 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (14.11) ஸ்ரீநகரின் நவ்காம் (Nowgam) பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
தடயவியல் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழு வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை மற்றும் தடயவியல் அதிகாரிகளாவர். படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





