மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்!

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறிவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (21) குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் சம்பந்தமாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒருவருட காலப்பகுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி வழங்கி இருந்தது. எனினும், ஒரு வருடம் கடந்தும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன்மூலம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழி மீறப்பட்டுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. எனவே, தோல்வி பயத்துக்கு அஞ்சியே இவ்வாறு இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது.
குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு எமது கட்சி ஒருபோதும் இடமளிக்காது. எனவே, வேட்பாளர்கள் பொலிஸ் அறிக்கையொன்றை வழங்கும் நடைமுறை சிறந்தது.” எனக் கூறியுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொலிஸ் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கட்டாயமாக்கியுள்ளது.