9 மாதங்களுக்கு பிறகு பூமியில் கால் வைத்த சுனிதா வில்லியம்ஸ்

9 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பினார்.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட நால்வர் குழு வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியது.
இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார்.
ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, 8 நாட்கள் மட்டுமே ஆய்வு பணிக்காக சென்ற சுனிதா வில்லியம்ஸ், 9 மாதங்கள் விண்வெளியிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் விம்மோர் உள்ளிட்டோரை அழைத்து வர சென்றது.
இந்திய நேரப்படி நேற்று காலை பத்து முப்பத்து ஐந்து மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பூமிக்கு புறப்பட்டது. அதில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்பனூர் ஆகியோர் டிராகன் விண்கலத்தின் கேப்சூலில் அமர்ந்தனர்.
ஏறத்தாழ 17 மணி நேர பயணத்திற்கு பின் கேப்சூல் வெற்றிகரமாக தரையிறங்கியது. இன்று அதிகாலை மூன்று இருபத்து ஏழு நிமிடத்தில் புளோரிடா கடற்பகுதியில் கேப்சூல் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து கேப்சூலில் இருந்த வீரர்கள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.