பிரேசில் – துப்பாக்கி முனையில் பேரூந்து கடத்தல் – 17 பேர் பத்திரமாக மீட்பு, இருவர் படுகாயம்!
																																		பிரேசில் நாட்டின் ரியோ டி ஜேனரோ நகரில் உள்ள நோவோ ரியோ பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பிரேசிலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்கின்றனர். அங்கிருந்து மினாஸ் ஜெரைஸ் நகருக்கு செல்வதற்காக பேருந்து ஒன்று புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.
அப்போது கையில் துப்பாக்கியுடன் ஒரு நபர் பேருந்தில் ஏறியுள்ளார். மேலும் பேருந்தில் இருந்த பயணிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார். அந்த பேருந்தில் குழந்தைகள், முதியவர்கள் உள்பட பலர் இருந்துள்ளனர். அவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் அங்குமிங்கும் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து பொலிஸார் அங்கு விரைந்து வந்து, பயணிகளை பிடித்து வைத்திருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு அந்த நபர் பேருந்தில் இருந்த பயணிகளை விடுவித்து பொலிஸிடம் சரணடைந்தார். அவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பேருந்தில் சிக்கியிருந்த 17 பேரை பொலிஸார் பத்திரமாக மீட்டனர். காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
        



                        
                            
