அறிந்திருக்க வேண்டியவை

நிலவு எந்த நாட்டுக்குச் சொந்தம்?

நிலவு என்பது பூமியிலிருந்து தொலை தூரத்தில் இருக்கிறது. கிராமத்து அம்மாக்கள் இன்னமும் குழந்தைகளுக்கு நிலவைக் காட்டி உணவு அளிக்கிறார்கள். என்றாலும் நிலவு தொடர்பான பல கதைகள், கதைகள்தான் என்பது நிரூபணமாகி விட்டன.

சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பாக (ஒரு பில்லியன் என்றால் 100 கோடி என்பது உங்களுக்குத் தெரியும்தானே?) நிலவு பூமியின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இ​ப்போது பிரச்னை அதுவல்ல. நிலவு எந்த நாட்டுக்குச் சொந்தம்?

அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங்தானே நிலவில் முதலில் காலை வைத்தார். அப்படியானால் நிலவு அமெரிக்காவுக்குத்தான் சொந்தமா? (சொல்லப்போனால் இதுவரை நிலவில் அமெரிக்கர்கள் மட்டும்தான் கால் பதித்திருக்கிறார்கள்).

இப்போது நிலவுச் சுற்றுலாவிற்காக சில தனியார் நிறுவனங்கள் பணம் வசூலிக்கிறார்கள். கோடிக் கணக்கில் பணத்தைக் கொடுத்தால், நிலவுக்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

தி கோல்டன் ஸ்பைக் என்ற நிறுவனம் இப்படி மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதாகக் கூறி புக்கிங் செய்ய ஆரம்பித்துவிட்டது. இரண்டு பேருக்கு ஒன்றரை பில்லியன் டாலர் தொகை செலுத்த வேண்டும்!

வருங்காலத்தில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இப்படி நிலவுக்குப் பயணங்களை ஏற்பாடு செய்யும் உரிமை உண்டு

நிலவு யாருக்குச் சொந்தம் என்ற கேள்விக்கு பதிலளிக்க அண்டார்க்டிகாவை நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

அண்டார்க்டிகா ஒரு தனி கண்டமாகக் கருதப்பட்டாலும், அது ஒரு நாடு கிடையாது! அப்படியென்றால் அது வேறு எந்த நாட்டுக்குக்காவது சொந்தமானதா? அதுவுமில்லை.

அண்டார்க்டிகாவில் எந்த அரசும் ஆட்சி அமைக்கவில்லை. அங்கு அரசியல் கட்சிகளே கிடையாது. (அங்கு நிலவும் குளிரில் மக்களே நிரந்தரமாக வசிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்).

‘அண்டார்க்டிகாவைப் பிரித்துக்கொள்ள மாட்டோம், எங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள மாட்டோம்’ என்ற உடன்படிக்கையில் ஐம்பது நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. (1826ல் ரஷ்யர்கள்தான் இதை​ முதலில் கண்டறிந்தார்கள் என்றாலும் அவர்கள் அங்கு வசிக்கவில்லை. அந்த ​நூற்றாண்டின் முடிவுவரை அது ஆளில்லாத பகுதியாகவே இருந்தது.)

அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக மட்டுமே அன்டார்க்டிகா பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ராணுவச் செயல்பாடுகளுக்கு அங்கு முழுவதுமாகத் தடை என்றும் மேற்படி உடன்படிக்கையில் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல அண்டார்க்டிகாவில் பிளாட்டினம், தங்கம், குரோமியம் போன்ற உலோகங்களும் உண்டு. உலகப் போர்களின் அழிவுகளால் கலவரப்பட்ட மேற்படி நாடுகள் ’2048 வரை ​அண்டார்க்டிகாவில் யாருமே சுரங்கம் வெட்டக்கூடாது என்றும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன​.

நிலவிலும் ​ஹீலியம் – 3 போன்ற அரிதான ரசாயனப் பொருள்கள் தென்படுகின்றன. ஆராய்ச்சியில் மேலும் பல அரிதான கனிமங்கள் அங்கு கிடைக்கக் கூடும். எனவே, நிலவுக்கு சொந்தம் கொண்டாடி நாடுகள் போட்டியிட்டால்?

முதலில் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்ததால் நிலவு அமெரிக்காவுக்குச் சொந்தமாகிவிட முடியாது. அப்படிப் பார்த்தால் விண்வெளிக்கு முதலில் தன் நாட்டவரை அனுப்பியதால், விண்வெளியே சோவியத்துக்குச் சொந்தமாகி விடுமா?

இதுவரை எந்தநாடும் நிலவுக்குச் சொந்தம் கொண்டாடவில்லை. அதற்கான அதிகாரபூர்வமான முயற்சிகளிலும் ஈடுபடவில்லை.

தவிர ஐ.நா. ஒப்பந்தப்பட்டி விண்ணில் உள்ள எந்தப் பொருளையும் எந்தக் குறிப்பிட்ட நாடும் சொந்தம் கொண்டாட முடியாது.

எனவே நிலவு எல்லாருக்கும்தான் – உங்களையும் சேர்த்து.

நன்றி – கல்கி

 

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.

You cannot copy content of this page

Skip to content