2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதியாவார்: ராஜித பரபரப்பு தகவல்!
” 2029 ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதி ஆவார். நாட்டுக்காக அவர் சவாலை ஏற்பார். வலுக்கட்டாயமாகவேனும் நாம் அவரை அழைத்துவருவோம்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ 2ஆவது தடவையும் நாடு வங்குரோத்தடைந்தால் மீண்டெழுவது கடினம் என ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டி இருந்தார்.
எனவே, அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கு முன்னர் ரணிலுக்கு ஆட்சி கிடைக்கப்பெற்றால் சர்வதேசத்துடன் பேச்சு நடத்தி, நாட்டுக்காக எதையாவது செய்யக்கூடும்.
மக்களிடம் உண்மையைக் கூறியே ஆட்சியை பொறுப்பேற்க வேண்டும். தம்மால் முடியும் என்பதை செய்து காட்டிய தலைவரே ரணில் விக்கிரமசிங்க. ரணிலின் பொருளாதார மீட்சித் திட்டம் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள்கூட பாராட்டினார்கள்.
நாட்டை மீட்டெடுப்பதற்குரிய பயணத்தில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் இணைவார். அவரை பலவந்தமாகவேனும் கொண்டுவருவோம்.
நெருக்கடி நிலையை மக்களுக்கு தாங்க முடியாதவேளை புரட்சி வெடிக்கும். கீறீஸின் நான்கு தடவைகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டன. இலங்கையில் தற்போது புதிய அரசியல் கலாசாரமே உள்ளது. ரணில் விக்கிரமசிங்க 2029 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதியாகக்கூடும்.” – என்றார் ராஜித சேனாரத்ன.





