தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்: தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார்!
தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸாரினால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, உரும்பிராயில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலையடியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தீர்மானத்துக்கு அமைவாக, உத்தியோகபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்தவர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக , வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த விசாரணையின் போது, பிரதேச சபையின் உத்தியோகபூர்வ தீர்மானத்துக்கு அமைவாகவே இந்நாளில் நினைவேந்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தவிசாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் பொலிஸார் தவிசாளரை விடுவித்துள்ளனர்.
இந்நிலையில் நினைவேந்தல் நிகழ்வு திட்டமிட்டபடி நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது என்று தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அறிவித்துள்ளார்.
உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள தியாகி பொன். சிவகுமாரனின் நினைவிடத்தில் ஈகைச்சுடரேற்றல் மற்றும் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்றும், இந்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரையும் உணர்வுபூர்வமாகப் பங்கெடுக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.





