முழு நாடும் கடன் பொறிக்குள் சிக்கியுள்ளது! விமல் வீரவன்ச காட்டம்!!
முழு நாடும் கடன் பொறிக்குள் சிக்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் சுமார் 3 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்காக ஒட்டுமொத்த மக்களும் இன்று நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். 2027 ஆம் ஆண்டுடன் ஐ.எம்.எஃபின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டம் நிறைவடையவுள்ளது. அதன் பின்னர் பொருளாதார நடவடிக்கைகளை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 695 மில்லியன் டொலர் 3 எரிபொருள் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும் அதன் பிறகு எவ்வாறு வெளிநாட்டு கையிருப்பை தக்கவைத்துக் கொள்வது என்பது குறித்து அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது.
கடந்த காலங்களில் இலகு வட்டி வீதத்தின் அடிப்படையில் தான் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது 5.3 சதவீத வட்டி வீதத்தில் கடன் பெற்றுக்கொள்ளப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் சுமார் 3 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்காக ஒட்டுமொத்த மக்களும் இன்று நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். முழு நாடும் நாணய நிதியத்தின் கடன் பொறிக்குள் சிக்குண்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.





