பிரித்தானியாவை உலுக்கிய ஹென்றி நோவாக்கின் மரணம்!! பல பகுதிகளில் போராட்டம்!
பிரித்தானியாவில் இறக்கும் தருவாயில் இருந்த ஹென்றி நோவாக்கிற்கு கைவிலங்கிடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸாரின் இந்த மோசமான நடத்தையை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
18 வயதான ஹென்றி நோவாக்கைக் கொலை செய்ததற்காக 23 வயதான விக்ரம் திக்வாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திக்வா தான் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொய் வாக்குமூலம் வழங்கிய நிலையில் இறக்கும் தருவாயில் இருந்த ஹென்றி நோவாக்கிற்கு கைவிலங்கிடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியதை தொடர்ந்து அதிகாரி ஒருவர் தனது பணியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
ஹென்றி நோவாக்கின் மரணத்தை சீர்த்திருத்த கட்சியின் (Reform UK) தலைவர் நைஜல் ஃபராஜ் பிளவுகளைத் தூண்டுவதற்கு பயன்படுத்துவதாக பிரதமர் ஸ்டாமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வெறுப்பைத் தூண்டுவதற்காகத் தன் மகனின் கொலையைப் பயன்படுத்த வேண்டாம் என்ற ஹென்றி நோவாக்கின் தந்தையின் வேண்டுகோளை எதிரொலித்த பிரதமர், அந்தக் குடும்பத்தின் விருப்பங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ஃபராஜின் “சீற்றத்திற்கான” அழைப்பு தவறானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்த சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் 11 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.





