தெற்கு லெபனானில் மேலும் நான்கு கிராமங்களுக்கு இஸ்ரேலின் கட்டாய இடப்பெயர்வு உத்தரவு
தெற்கு லெபனானில் மேலும் நான்கு கிராம மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் கட்டாய இடப்பெயர்வு உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிடோன் மற்றும் டயர் நகரங்களுக்கு இடையிலும், பெக்கா பள்ளத்தாக்குப் பகுதிக்கும் அருகிலும் அமைந்துள்ள ஜ்தெய்தெத் அன்சார், ஜ்ராரியே, மஸ்ராத் கௌதரியத் எல்-ரெஸ் மற்றும் மஷ்கரா ஆகிய பகுதிகளின் குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலியப் படைகள் தாங்கள் “பாதுகாப்பு இடைமண்டலம்” எனக் குறிப்பிடும் பகுதிக்கு அப்பாலும் தாக்குதல்களை விரிவுபடுத்தி வருவதாகக் கூறி, பொதுமக்கள் சிடோனுக்குத் தெற்கே உள்ள ஸஹ்ரானி நதியின் வடபகுதிக்குச் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர், தெற்கு லெபனானின் நபாத்தியே மாவட்டத்தில் உள்ள மைஃபதூன், சௌகின் மற்றும் ஸெப்தின் பகுதிகளின் மக்களுக்கும் இதேபோன்ற கட்டாய இடப்பெயர்வு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
இன்றைய தினம் மட்டும் தெற்கு லெபனானில் வெளியிடப்பட்ட இரண்டாவது இடப்பெயர்வு உத்தரவு இதுவாகும்.
மேலும், ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் அல்லது இராணுவ நிலைகளுக்கு அருகில் தங்குவது உயிருக்கு ஆபத்தாக இருக்கக்கூடும் என்பதால், மக்கள் தாமதமின்றி தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவம் எச்சரித்துள்ளது.





