மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி விஷமருந்தி தற்கொலை முயற்சி: நுவரெலியாவில் பரபரப்பு!
நுவரெலியா மேல் நீதிமன்றத்தால், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று (29.05.2026) நண்பகல் 12.30 மணியளவில், HC/NE/17/2020 என்ற இலக்கமுடைய கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய, சந்தேக நபரான உடபுஸ்ஸல்லாவ, தொடம்வத்த பகுதியைச் சேர்ந்த 44 வயது நபர் குற்றம் புரிந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்திய பின், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரால் அவர் நீதிமன்றத்தில் உள்ள தற்காலிக சிறைக்கூட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, அவர் தன்வசம் மறைத்து வைத்திருந்த விஷத்தை திடீரென எடுத்து அருந்தி, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைத் அவதானித்த நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவினரும் அங்கிருந்தவர்களும், உடனடியாகச் செயற்பட்டு அவரை மீட்டு, சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இக்குற்றவாளியின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த நபர் இந்த வழக்கு விசாரணைகளின் போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இன்று தீர்ப்புக்காகத் தனது வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
இதன்போது, விஷ போத்தல் ஒன்றை மறைத்து எடுத்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





