இந்தியாவில் வைரலான கரப்பான் பூச்சி கட்சி!
இந்தியாவில் கரப்பான் பூச்சி இயக்கம் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) – சோம்பேறிகள் மற்றும் வேலையற்றோரின் குரல்’ என்ற இந்த இயக்கம், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புப் பட்டதாரியும், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முன்னாள் சமூக ஊடக வியூக நிபுணருமான அபிஜீத் திப்கே என்பவரால் நிறுவப்பட்டுள்ளது.
இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 20.5 மில்லியன் பின்தொடர்பவர்களையும், எக்ஸ்-எக்ஸ் (X) தளத்தில் 200,000 பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளது.
இந்த இயக்கமானது இந்திய இளைஞர்களின் சில முக்கியக் கவலைகளை வெளிப்படுத்தும் வகையில் நிறுவப்பட்டதாகவும், அரசியல் மற்றும் பொருளாதார விரக்தியின் சின்னமாக கருதப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம் 2014 முதல் ஆட்சியில் இருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியை பகடி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், வேலையற்ற இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுன்னிகள் போல என விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்தே இந்த இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அபிஜீத் திப்கே, “அதிகாரத்தில் இருப்பவர்கள் குடிமக்களை கரப்பான் பூச்சிகளாகவும் ஒட்டுண்ணிகளாகவும் நினைக்கிறார்கள். அழுகிய இடங்களில்தான் கரப்பான் பூச்சிகள் பெருகும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இன்று இந்தியா அப்படித்தான் இருக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.





